நன்றி : கவிதைக்காரன்

உன் எச்சில் திரவம் சேர்த்து
கொஞ்சம் முத்தங்கள் போடு!
கன்னங்கள் ஈரமாகட்டும்!
இலக்கணங்களுக்கு விடுப்பு கொடுத்ததால்
பிறழும் உன் மொழிச் சப்தங்கள்
அர்த்தங்கள் புரிந்திட அனுமதிவேண்டி
ஓடி ஒழிந்து, தேடிக்களிக்கும்
இம்சைகள்
இச்சையாகி இசையமைக்கட்டும்...!
வெட்டவெளி ஆனால் என்ன
வேற்று கிரகமானால் என்ன
முட்ட வரும் உன்னை
பற்றியெடுத்து முத்தமிடும்
கணம் புதியதாய் ஜனனம்...!
கன்னக்குழிச் சிரிப்பும்
கரிப்பொட்டு வதனமுமாய்
ஈர்க்கும் புன்னகைப்பிள்ளை உன்னை
மாரனைத்து தழுவிக்கிடந்த
தினங்களை திரும்பத்திரும்பத் தேடுகிறேன்!
என்னையே வளைய வரும்
ஆடைகளில்லா வெண்ணிலவு உன்னை...
ஆரத்தளுவுதளில் எத்தனை இன்பம்!
கற்றைக்கூந்தலை உன் பிஞ்சுவிரல்
பற்றி இழுக்கும் போது
இமைகள் மூடி இதயம் கரைகிறேன்...
ஈராறு பௌர்ணமிகள் கண்ட உன்
ஈர மேனியோடு விளையாடும்
காலைப்பொழுது எனக்கு அழுப்பதே இல்லை!
உன் வெம்மேனி வீசும் அந்த
நறுமுகை வாசத்தில்
நான் கிரஹித்துச் சுழல்கிறேன்...!
என் மகளே! எனக்கான தாய்மையை
அடையாளமாய்க் கொடுத்த உன்னை
தாலாட்டிக்கிடப்பதில் நேரங்காலமேது..!
- மகளுக்குத் தாயாய்...
கவிதைக்காரன்!
No comments:
Post a Comment
Your feedback's/comments are welcome. Will be posted after moderation.